விக்ரம் மகன் நடிக்கும் படம் மீண்டும் கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்


விக்ரம் மகன் நடிக்கும் படம் மீண்டும் கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்
x
தினத்தந்தி 14 April 2019 10:44 PM GMT (Updated: 14 April 2019 10:44 PM GMT)

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன்ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க வர்மா என்ற பெயரில் பாலா தமிழில் இயக்கினார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் படம் திருப்தியாக இல்லை என்றும், முழு படத்தையும் கைவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படப்பிடிப்பை நடத்தப்போவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அர்ஜுன்ரெட்டி படம் துருவ் நடிக்க ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரானது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரிசாயா இந்த படத்தை இயக்கினார். இந்தியிலும் கபீர்சிங் என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டது.

கபீர் சிங் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆதித்ய வர்மா படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஆதித்யா வர்மா படத்தை படக்குழுவினர் கைவிட்டு விட்டதாகவும், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தையே தமிழில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

இதனை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் போர்ச்சுக்கல் செல்கிறார்கள் என்று தயாரிப்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Next Story