மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா


மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 5:18 PM GMT)

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து படங்கள் குவிந்தன.

மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கல்யாண் இயக்கத்தில் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்துக்கு ஜாக்பாட் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கிறார். நாச்சியார் படத்திலும் போலீஸ் அதிகாரியாக வந்தார். அவருடன் ரேவதியும் போலீசாக நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இருவரும் அக்காள், தம்பியாக நடிக்கின்றனர். சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இவர் வசூல் சாதனை நிகழ்த்திய திரிஷ்யம் என்ற மலையாள படத்தை இயக்கி பிரபலமானவர். தமிழிலும் கமல்ஹாசன் நடித்து பாபநாசம் என்ற பெயரில் வெளியானது.

Next Story