விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை


விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை
x
தினத்தந்தி 10 May 2019 11:15 PM GMT (Updated: 10 May 2019 10:29 PM GMT)

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சிந்துபாத். அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தை அடுத்த வாரம் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுபோல் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படமும் திரைக்கு வர தயாராகிறது.

இந்த 2 படங்களையும் வெளியிடுவதாக இருந்த பட நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி வினியோகத்தில் இந்த நிறுவனத்துக்கும் பாகுபலி தயாரிப்பாளருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 படங்களையும் வெளியிடும் பட நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய ரூ.17 கோடி பாக்கி தொகையை வழங்காமல் படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று பாகுபலி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு படங்களையும் வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இதனால் சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கோர்ட்டில் மனுதாக்கல் செய்து தடையை நீக்கும் முயற்சியில் 2 படக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.


Next Story