சிம்புவுக்கு வில்லனாக அரவிந்தசாமி?


சிம்புவுக்கு வில்லனாக அரவிந்தசாமி?
x
தினத்தந்தி 8 Jan 2020 11:00 PM GMT (Updated: 8 Jan 2020 9:31 PM GMT)

சிம்பு நடிப்பில் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் கடந்த வருடம் திரைக்கு வந்தன. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர்.

‘மாநாடு’  படப்பிடிப்பில் பங்கேற்காமல் சிம்பு தாமதம் செய்வதாக குற்றம்சாட்டி படத்தையே நிறுத்தினர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாநாடு பட வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வாகி உள்ளார். இவர் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மாநாடு படத்தில் டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான கன்னட நடிகர் சுதீப்பை மாநாடு படத்திலும் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. இதனை சுதீப் மறுத்தார். இந்த நிலையில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க தற்போது அரவிந்தசாமியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவும், அரவிந்தசாமியும் செக்க சிவந்த வானம் படத்தில் அண்ணன்-தம்பியாக நடித்து இருந்தனர். மாநாடு படப்பிடிப்பு வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. 

Next Story