யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’


யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’
x
தினத்தந்தி 13 Feb 2020 11:30 PM GMT (Updated: 13 Feb 2020 10:55 AM GMT)

‘தங்கப்பதக்கம்’ புகழ் ஸ்ரீகாந்த், சுருளிராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சோ, எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா ஆகியோர் நடித்து 1974-ல் திரைக்கு வந்த நகைச்சுவை படம், ‘காசி யாத்திரை.’

வி.சி.குகநாதன் கதை-வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷனில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம், அது.

சுருளிராஜன் தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சிக்கிறார். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடியும் தற்கொலை செய்ய வருகிறது. அவர்களை சுருளிராஜன் காப்பாற்றுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை சரவெடியாக நகரும்.

‘காசி யாத்திரை’ படத்தின் இரண்டாம் பாகம், ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற பெயரில் தயாராகி, அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில் தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, சிவசங்கர், பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வி.சி.குகநாதன் கதைக்கு வசனம் எழுதி புகழ்மணி டைரக்டு செய்து இருக்கிறார்.

இதையடுத்து, ‘காசி யாத்திரை-3’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்த படத்திலும் யோகி பாபு, தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, பிரியங்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, மயில்சாமி, மனோபாலா, கோவை சரளா, மதுமிதா ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.

வி.சி.குகநாதன் கதைக்கு புகழ்மணி வசனம் எழுத, திரைக்கதை-டைரக்‌ஷன் பொறுப்பை வி.ஜி.ஈஸ்வரன் ஏற்றுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆரூரான், மாருதி இ.மோகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு: வரதன், விஜய முரளி, அனந்தராமன். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகளை காரைக்குடியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

Next Story