துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மீது விஷால் புகார்


துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து விலகிய   இயக்குனர் மீது விஷால் புகார்
x
தினத்தந்தி 11 March 2020 11:00 PM GMT (Updated: 11 March 2020 6:21 PM GMT)

விஷால் நடிக்கும் துப்பறிவாளன்-2 படத்தை மிஷ்கின் இயக்கினார். படம் பாதிமுடிந்த நிலையில் ரூ.5 கோடி சம்பளம் உள்பட பல்வேறு நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதில், விஷாலே படத்தை இயக்குகிறார்.

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கனடா மற்றும் இங்கிலாந்தில் திரைக்கதை எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய் அளவு செலவழித்த பின்னர், படத்தை விட்டு விலகுவது ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கிலாந்தில் 3 முதல் 4 மணி நேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிட்டபோது செலவை குறைக்க, இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தலாமா என்று கேட்டால் அது தவறா?

படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், இந்தியாவுக்கு திரும்பி, பின்பு பட நிறுவன அலுவலகத்துக்கு வருவது சரியா? எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்து நானே இயக்குகிறேன். இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாக கூடாது. இயக்குனராக அறிமுகமாக அனைவரின் ஆசீர்வாதங்களையும்,  வாழ்த்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story