பிரபுதேவா படத்தில் நயன்தாரா?


பிரபுதேவா படத்தில் நயன்தாரா?
x
தினத்தந்தி 4 Jun 2020 2:26 AM GMT (Updated: 4 Jun 2020 2:26 AM GMT)

பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா ஊரடங்கினால் 30-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன. படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கும்படி அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு படவேலைகளை தொடங்கி முடங்கிப்போன ‘கருப்பு ராஜா வெள்ளை ரோஜா‘ படத்தின் படப்பிடிப்பை ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஐசரிகணேஷ் தயாரிக்க பிரபுதேவா இயக்கினார்.

கார்த்தி, விஷால், சாயிஷா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. நடிகர் சங்க நிதிக்காக இந்த படத்தை எடுப்பதாகவும் தெரிவித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சில பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. இதன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து படக்குழுவினருடன் பிரபுதேவா ஆலோசித்து வருகிறார். திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இதுகுறித்து நயன்தாராவிடம் பேசவும் திட்டமிட்டு உள்ளனர். அவர் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏற்கனவே பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது. பின்னர் சிம்புவை காதலித்து அதுவும் முறிந்தது. சிம்புவை பிரிந்த பிறகு அவருடன் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். எனவே பிரபுதேவா படத்திலும் மறுப்பு சொல்லாமல் நடிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Next Story