சரித்திர கதையை இயக்கும் தனுஷ்


சரித்திர கதையை இயக்கும் தனுஷ்
x
தினத்தந்தி 11 Jun 2020 1:47 AM GMT (Updated: 11 Jun 2020 1:47 AM GMT)

சரித்திர கதையை நடிகர் தனுஷ் இயக்க உள்ளார்.



தனுஷ், பவர் பாண்டி படம் மூலம் ஏற்கனவே இயக்குனராக அறிமுகமானார். இதில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் ஆகியோரும் நடித்தனர். தனுசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் ‘நான் ருத்ரன்‘ என்ற சரித்திர கதையை இயக்கும் முயற்சியில் இறங்கினார். இதில் தனுசே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, நாகார்ஜூனா, அதிதிராவ் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் பட வேலைகள் தொடங்கிய நிலையில் தனுஷ் வேறு படங்களில் ஓய்வில்லாமல் நடித்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படபிடிப்பு மீண்டும் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் நான் ருத்ரன் படப்பிடிப்பை தொடங்க தனுஷ் திட்டமிட்டு உள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தனுஷ் நடித்து கடந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. இதில் அசுரன் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்கிறார்கள். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

Next Story