ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையில் தமிழ் திரைப்படமான மண்டேலா...?


ஆஸ்கார்  விருதுக்கான பரிந்துரையில் தமிழ் திரைப்படமான மண்டேலா...?
x
தினத்தந்தி 22 Oct 2021 12:30 AM GMT (Updated: 22 Oct 2021 12:30 AM GMT)

2022ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் தமிழ் திரைப்படம் ‘மண்டேலா’ இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா,

94-வது அகாடெமி விருதுகள் (ஆஸ்கார்)  அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில்  ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’, ‘மண்டேலா’  உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற போட்டியிடுகின்றன.

இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15  நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிடுகின்றனர். “ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் - சத்யஜித் ராயின்” நூற்றாண்டு வருடம் என்பதால்,  கொல்கத்தாவில் நடைபெறும் திரைப்பட தேர்வு நிகழ்ச்சி அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும் என்று திரைப்பட கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

மண்டேலா படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார்.சாதி அரசியல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், ஒரு தாழ்த்தப்பட்ட சிகையலங்கார நிபுணர் கேம் சேஞ்சராகிறார். அவரால் அந்த கிராம மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முடிந்ததா? என்னும் கதையமைப்பில் மண்டேலா திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம்  இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு  மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு  தேர்வானது. ஆனால், ஆஸ்கார் விருதுக்கான தேர்வுக் குழுவால் அந்த திரைப்படம் இறுதி பட்டியலுக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதுவரை  “மதர் இந்தியா, சலாம் பம்பாய்  மற்றும் லகான்”  ஆகிய மூன்று  திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை.

ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெறுவதற்கான இந்த போட்டியில், மார்ட்டின் ப்ரக்கட் இயக்கத்தில், குஞ்சக்கோ போபன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘நாயாட்டு’ திரைப்படமும் உள்ளது. இம்முறை கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் பரிசீலனைக்கு தேர்வாகவில்லை.இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுக்கான இறுதிகட்ட பரிந்துரை பட்டியலில் சூரரைப்போற்று திரைப்படம் இருந்தது. ஆனால், இந்த திரைப்படத்தால் ஆஸ்கார் விருதை பெற முடியவில்லை. இந்நிலையில் மண்டேலா திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்படுமா எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story