ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய 'கூழாங்கல்'


ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்
x
தினத்தந்தி 22 Dec 2021 7:19 AM GMT (Updated: 22 Dec 2021 7:19 AM GMT)

'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதிப் பட்டியலில் இடம்பெறாமல் விருது போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.

சென்னை,

நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.

ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும். 

இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன், 'இந்த பட்டியலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இருப்பினும் இவ்வளவு தூய்மையான சினிமாவை கொடுத்ததற்காக பி.எஸ்.வினோத்ராஜ்-க்கு நான் நன்றி கூறுகிறேன். 

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான அதிகாரப்பூர்வ நுழைவாக எங்கள் படத்தைத் தேர்ந்தெடுத்த இந்திய ஜூரி உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். எங்கள் நலம் விரும்புபவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.


Next Story