பிரபல நடிகையின் ஆபாச புகைப்படங்கள்... இணையத்தில் வெளியிட்ட வாலிபர் மீண்டும் கைது


பிரபல நடிகையின் ஆபாச புகைப்படங்கள்... இணையத்தில் வெளியிட்ட வாலிபர் மீண்டும் கைது
x
தினத்தந்தி 20 Jan 2024 12:22 PM GMT (Updated: 20 Jan 2024 1:17 PM GMT)

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை பிரவீனாவின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

திருவனந்தபுரம்,

தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பிரவீனா. மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிரியமானவள், மகராசி, இனியா போன்ற பல்வேறு தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடயே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை பிரவீனாவின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதுகுறித்து அவர் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கேரள போலீசார் நெல்லையை சேர்ந்த பாக்யராஜ் (வயது24) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்தனர்.

போலீசார் அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஒரு மாதம் சிறையில் இருந்த பாக்யராஜ் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை பிரவீணா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு போலியாக உருவாக்கபபட்ட ஐ.டி.க்களில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை பிரவீணா, அது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் அளித்தார்.

ஏற்கனவே நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் பாக்யராஜ், அவரை பழிவாங்கும் விதமாக மீண்டும் அவ்வாறு செயல்பட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அவரை பிடிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பாக்யராஜ் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் டெல்லியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடிக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் கிரைம் போலிசார் டெல்லியில் அவரை மீண்டும் கைது செய்தனர். அவரை கேரளா அழைத்து வந்த சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story