'பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள்' - இயக்குனர் சீனு ராமசாமி வேதனை


பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள் - இயக்குனர் சீனு ராமசாமி வேதனை
x
தினத்தந்தி 4 Jun 2023 6:28 PM GMT (Updated: 4 Jun 2023 8:49 PM GMT)

ரெயில் விபத்து தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழக அரசு சிறப்பு ரயில் மூலம் தமிழகம் கொண்டு வந்தது. இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"தொலைந்து போயிருக்கலாம் ஆறுதலாவது உண்டு, தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும் திரும்ப வரலாம்மென்ற நினைப்பு, நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும். சீனு ராமசாமி வாழ போனவர்கள் திரும்ப வருகையில் நிகழும் பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள்.

விபத்துக்கு பின்னிருக்கும் ஒரு கவனமின்மை அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை. இறப்பின் அஞ்சலி செலுத்தும் நேரமிது. பிழைத்தவர்கள் மறுபடி பிழைக்கச் செய்யும் தருணமிது. தப்பியவர்கள் இல்லம் வரும் மாலையிது. சுற்றி வந்து கைகொடுத்த கிராமத்து மனிதத்தை வாழ்த்தும் நிமிடமிது" என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.




Next Story