நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்


நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்
x

நேற்று நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்' என்று தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். மேலும் பல ரசிகர்கள், மன்சூர் அலிகானின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர்.

நேற்று நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி அவருக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார் அவர் இல்லாததால் மனைவியிடம் சம்மனை கொடுத்தனர்.


Next Story