முதன் முறையாக தனது பூர்வீக ஊருக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்..!


முதன் முறையாக தனது பூர்வீக ஊருக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்..!
x

நடிகர் ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரான நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு முதன் முறையாக வருகை தந்தார்.

கிருஷ்ணகிரி,

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் இதுவரை சுமார் ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு தனது ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றார்.

அங்கு அந்த மாநில முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் அங்கு துணை முதல்-மந்திரியுடன் சேர்ந்து 'ஜெயிலர்' படத்தையும் பார்த்தார். பிறகு அயோத்தி ராமர்கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

இதையடுத்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள் ஆச்சரியமும், உற்சாகமும் அடைந்தனர். அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்நிலையில், முதன் முறையாக தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வருகை தந்தார். அப்போது ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் உடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு செய்தார். ரஜினிகாந்த் தனது சொந்த ஊருக்கு வந்ததால் அந்த கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு வந்த ரஜினிகாந்துக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story