நடிகர் சதீஷ் மரண விவகாரம்; சந்தேகத்திற்கு உரிய அதிகாரியை மாற்ற வேண்டும்: விகாஸ் மாலுவின் 2-வது மனைவி


நடிகர் சதீஷ் மரண விவகாரம்; சந்தேகத்திற்கு உரிய அதிகாரியை மாற்ற வேண்டும்: விகாஸ் மாலுவின் 2-வது மனைவி
x

நடிகர் சதீஷ் மரண விவகாரத்தில், சந்தேகத்திற்கு உரிய அதிகாரியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி விகாஸ் மாலுவின் 2-வது மனைவி விசாரணை ஆஜராக மறுத்துள்ளார்.



புதுடெல்லி,


இந்தி திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சதீஷ் சந்திர கவுசிக் (வயது 66).

அவர் தனது நண்பரான விகாஸ் மாலு என்பவரின் பண்ணை இல்லத்தில் சில நாட்களுக்கு முன் ஹோலி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினார். நடனம் ஆடிய களைப்பில் இரவில் தூங்க சென்றவர் பின்னர் சுவாச பாதிப்பு என கூறி நள்ளிரவில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 9-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்து விட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. கடந்த 1987-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட திரை துறையினர், ரசிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மரணத்தில் மர்மம்

இந்த சூழலில், சதீஷ் கவுசிக்கின் மரணத்திற்கு பின்னணியில் உள்ள பல மர்ம விசயங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. அவரது நண்பரான விகாஸ் மாலு என்பவரது பண்ணை இல்லத்தில் வைத்து நடிகர் கவுசிக் உயிரிழந்து உள்ளார்.

அதற்கு முன்பு வரை நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை இரவில் கொண்டாடி உள்ளார். அதன்பின்னர், தூங்க சென்றார். ஆனால், இரவு 12 மணியளவில் தனது மேலாளரை அழைத்து சுவாச கோளாறு பற்றி கூறியுள்ளார்.

இதன்பின்பு அதிகாலை 1.43 மணியளவில் குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரை மேலாளர் சேர்த்து உள்ளார். எனினும், சி.பி.ஆர். உள்ளிட்ட சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

அவர் ஹோலி கொண்டாடிய டெல்லி பண்ணை இல்லத்தில் உள்ள சி.சி.டி.வி.யின் 7 மணிநேரம் வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், 98 சதவீதம் இதய பகுதியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போதை பொருள் எதுவும் இல்லை என பரிசோதனை மாதிரியும் தெரிவிக்கின்றது

எனினும், பண்ணை இல்ல உரிமையாளர் விகாசின் 2-வது மனைவி அளித்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில், சதீஷ் ஜிக்கும், எனது கணவருக்கும் இடையே வர்த்தக தொடர்புகள் உண்டு. கடந்த ஆண்டு ஆகஸ்டில், சதீஷ் ஜி முன்பு கொடுத்த ரூ.15 கோடியை திருப்பி தரும்படி துபாயில் வைத்து, எனது கணவரிடம் கேட்டார்.

ஆனால், எனது கணவர் இந்தியாவில் வைத்து தொகையை திருப்பி தருகிறேன் என கூறினார் என்று விகாசின் 2-வது மனைவி போலீசில் கூறியுள்ளார்.

ரஷிய அழகிகள்

தொடர்ந்து அவர் புகாரில், இதுபற்றி கணவர் விகாசிடம் கேட்டபோது, சதீஷ் ஜியிடம் பணம் வாங்கினேன். ஆனால், கொரோனா காலத்தில் பணம் தொலைந்து விட்டது என கூறினார். பெரிய தொகையை திருப்பி தரும் எண்ணத்தில் விகாஸ் இல்லை.

சதீஷ் கவுசிக்கை எதிர்கொள்ள புளூ பில்ஸ் மற்றும் ரஷிய அழகிகளை பயன்படுத்துவேன் என அவர் என்னிடம் கூறினார். அதனாலேயே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தெரிவித்து உள்ளேன் என்று விகாஷின் 2-வது மனைவி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், விகாஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என அவரது 2-வது மனைவி புகார் ஒன்றில் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அந்த புகாரில், விகாசின் மகனும் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கினார். இதனை முற்றிலும் தாங்கி கொள்ள முடியாமல் கடந்த அக்டோபரில் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று விகாசின் 2-வது மனைவி அந்த புகாரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், விகாசின் முதல் மனைவியின் மைனர் மகனும் போக்சோ சட்டத்தின் கீழ், விகாசின் 2-வது மனைவி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால், புகாரை பெற்று கொண்ட போலீசார் அதன்பின்னர் இருவர் மீதும் கைது போன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

திட்டமிட்ட படுகொலை

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த தொழிலதிபரான விகாஸின் 2-வது மனைவி அளித்துள்ள புகாரில், இந்தியாவிலும், துபாயிலும் எங்களை கவுசிக் அடிக்கடி சந்திப்பது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டு நோக்கத்திற்காக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி துபாயில் வைத்து, கவுசிக் கேட்டார்.

முதலீட்டிலும் ஈடுபடாமல், தொகையையும் திருப்பி தராமல் மோசடி செய்தது பற்றி உணர்ந்து உள்ளார். அதனை விகாசிடமும் கூறியுள்ளார் என புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் எனது கணவரின் பண்ணை இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில நடிகர் சதீஷ் கவுசிக் கலந்து கொண்டார். வந்த இடத்தில் அவரது உடல்நலம் பாதிப்படைந்தது. கவுசிக்கிற்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அதற்கு தனது கணவரே ஏற்பாடு செய்திருந்தார். அந்த பண்ணை இல்லத்தில் சில சர்ச்சைக்குரிய மருந்து பொருட்களும் இருந்தன என கூறினார். இதேபோன்று, போலீசார் சர்ச்சைக்குரிய சில மருந்துகளை கைப்பற்றி உள்ளனர். இதனால், நடிகர் கவுசிக்கின் மரணத்தில் பல சந்தேகங்கள் கிளம்பி உள்ளன. இது திட்டமிட்ட படுகொலை என விகாஸின் 2-வது மனைவி கூறியுள்ளார்.

தாவூத் இப்ராகிம்

தொடர்ந்து கூறும்போது, விகாஸ் மாலுவுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் உள்பட பலருடன் தொடர்பு உள்ளது. எங்களது வீட்டுக்கு அடிக்கடி வரும் பல்வேறு நபர்களின் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. எங்கள் வீட்டிற்கு வந்த அனாஸ் என்பவர் தாவூத் இப்ராகிமின் மகன் என விகாஸ் என்னிடம் கூறினார். எங்கள் வீட்டுக்கு வந்த முஸ்தபா என்பவர் தாவூத் இப்ராகிமின் வலதுகரம் போல் செயல்படுபவர் என்று அவர் கூறியது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், விகாசின் 2-வது மனைவியை விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில், நீங்கள் அளித்த புகார் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாருடன் தொடர்புடைய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை உறுதி செய்ய உங்களையும் விசாரிக்க வேண்டிய அடிப்படை காரணிகள் உள்ளன.

அதனால், நீங்கள் விசாரணை அதிகாரியிடம் உங்களது வீடு அல்லது உங்களுக்கு வசதிப்பட்ட இடத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டு கொள்ளப்படுகிறீர்கள் என டெல்லி போலீசார் அளித்த நோட்டீஸ் குறிப்பிடுகிறது.

சாட்சிகள் கலைப்பு

எனினும், இதுபற்றி விகாஸ் மாலுவின் 2-வது மனைவியின் வழக்கறிஞர் ராஜேந்திர சாப்ரா கூறும்போது, விசாரணை அதிகாரியின் மீது சந்தேகம் உள்ள சூழலில், விசாரணைக்கு விகாஸ் மாலுவின் 2-வது மனைவி ஒத்துழைப்பு வழங்கமாட்டார் என கூறியுள்ளார்.

அந்த காவல் ஆய்வாளர் மாற்றப்படும்வரை எனது கட்சிக்காரர் விசாரணைக்கு வரமாட்டார். இதுபற்றி டெல்லி காவல் ஆணையாளருக்கும் இ-மெயில் வழி தகவல் அனுப்பி இருக்கிறோம். காவல் ஆய்வாளரின் சந்தேக செயல்பாடு பற்றியும் கூறியுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

விகாஸ் மாலு மீது இந்த பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வழக்கை இதே காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.

ஆனால், சாட்சிகளை சீர்குலைத்ததற்காக அவர் விசாரணை பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, மீண்டும் எனது கட்சிக்காரர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். இதற்கும், அதே விசாரணை அதிகாரியை நியமித்து இருப்பது ஆச்சரியம் தருகிறது என்று கூறியுள்ளார்.

கவுசிக் மனைவி

எனினும், சதீஷ் கவுசிக்கின் மனைவி சசி கவுசிக் கூறும்போது, சதீஷ், விகாஸ் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருபோதும் அவர்கள் சண்டை போட்டு கொண்டதே இல்லை. விகாஸ் பெரிய பணக்காரர்.

அதனால், அவருக்கு சதீஷ் கவுசிக்கிடம் இருந்து பணம் தேவைப்படுவதற்கான சூழ்நிலைகளே இல்லை. பண பரிமாற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.

சதீஷ் 98 சதவீதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது. போதை பொருள் எதுவும் இல்லை என பரிசோதனை மாதிரி தெரிவிக்கிறது. டெல்லி போலீசாரும் எல்லாவற்றையும் ஆய்வு செய்து விட்டனர்.

எனது கணவரின் மறைவுக்கு பிறகு அவருக்கு அவதூறு ஏற்படுத்த விகாசின் மனைவி ஏன் முயற்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. அவருக்கு கணவரிடம் இருந்து பணம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். அதனால், இந்த விவகாரத்தில் சதீஷை தொடர்புப்படுத்தி உள்ளார் என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story