கிரிக்கெட்டில் கால்பதிக்கும் நடிகர் சூர்யா- சென்னை அணியை வாங்கினார்


கிரிக்கெட்டில் கால்பதிக்கும் நடிகர் சூர்யா- சென்னை அணியை வாங்கினார்
x

ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அகரம் அறக்கட்டளை நிறுவனம் மூலமாக பல ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

இதைதொடர்ந்து நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதிக்கிறார். அதாவது டி20 கிரிக்கெட்போல டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐ.எஸ்.பி.எல் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது.

இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில்தான் நடத்தப்பட உள்ளது. வருகிற 2024-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாட இருக்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைதளத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.


Next Story