காதலரை கரம் பிடித்த நடிகை டாப்சி


காதலரை கரம் பிடித்த நடிகை டாப்சி
x

நடிகை டாப்சி தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக கதைக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார். சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என பல பிரிவுகளின் கீழ் 2011-ம் ஆண்டுக்கான ஆறு தேசிய விருதுகளை கைப்பற்றியது. இப்படத்தின் ஒரு அங்கமாக இருந்த டாப்சிக்கு கோலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். 'காஞ்சனா 2', 'வந்தான் வென்றான்', 'கேம் ஓவர்', 'அனபெல் சேதுபதி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.சமீபத்தில் ஷாருக் கான் நடித்து இந்தியில் வெளியான டங்கி படத்தில் டாப்சி நடித்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பொது பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு காதலிக்க தொடங்கினர்.

சமீபத்தில்தான் தனது காதலை சமூக ஊடகங்களுக்கு தெரிவித்து, விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். 23-ம் தேதி டாப்ஸி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணத்தில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, இவர்களின் திருமணம் புகைப்படங்கள் ஒன்றுகூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story