நடிகை தீபா தற்கொலை விவகாரம்: காதலன் சிராஜுதின் ஆஜராக போலீசார் சம்மன்


நடிகை தீபா தற்கொலை விவகாரம்: காதலன் சிராஜுதின் ஆஜராக போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 20 Sep 2022 8:00 AM GMT (Updated: 20 Sep 2022 8:01 AM GMT)

'வாய்தா' பட நடிகை தீபா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 'வாய்தா' பட நடிகை பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"நான் ஒருவரை காதலித்து வந்தேன். அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என உருக்கமான கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நடிகை பவுலின் ஜெசிகாவின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது குறித்து விசாரித்தனர். அதில் அவர், கடைசியாக சிராஜூதீன் என்பவரிடம் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

ஆனால் தற்போது சிராஜூதீன் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் போலீஸ் விசாரணைக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) போலீஸ் நிலையம் வருவதாக தெரிவித்தார்.


இந்த நிலையில், நடிகை பவுலின் தீபா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு தீபாவின் காதலன் சிராஜுதின் வராததால் நாளை நேரில் ஆஜராக கோயம்பேடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


நடிகை தற்கொலைக்கான முழு காரணம் என்ன? நடிகை தற்கொலை செய்து கொள்ள சிராஜூதீன் தூண்டினாரா? அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது சிராஜூதீனிடம் விசாரித்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story