இடைக்கால தடை நீக்கம்... திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது அயலான் திரைப்படம்...!


இடைக்கால தடை நீக்கம்... திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது அயலான் திரைப்படம்...!
x

டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மீது வழக்கு தொடர்ந்தது.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏலியன் கதைக்களத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்த படத்திலிருந்து 'வேற லெவல் சகோ' என்ற பாடல் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகியிருந்தது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த படம் நாளை வெளியாக உள்ளது.

இதற்கிடையே கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுக்குத் தரவேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், டி.ஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் அந்த தொகை முழுவதையும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் திருப்பி அளித்ததை அடுத்து படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதேபோல எம்.எஸ்.சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய ரூ.1 கோடியை தரும் வரை 'அயலான்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு நீதிபதி அப்துல் குர்துஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.50 லட்சத்தை மதியதிற்குள் செலுத்த உத்தரவிட்டார். அதுவரை அயலான்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து எம்.எஸ்.சேலஞ்ச் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் திருப்பி செலுத்தியது. மேலும் மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ஏப்ரல் 10ம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்திரவாதம் அளித்தது. இதனையடுத்து படத்தை வெளியிட விதித்த இடைக்கால உத்தரவை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அயலான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.


Next Story