திரையரங்குகளில் வெளியானது "அயலான்"- ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்


திரையரங்குகளில் வெளியானது அயலான்- ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்
x

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி(இன்று) வெளியாகும் என அறிவித்து இருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படம் இன்று வெளியானது. படம் வெளியானதையொட்டி, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் குவிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ஆர்வமுடன் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி திரையரங்கம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திரையரங்கில் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும். ரசிகர்கள் அனைவரும் நம்பி, திரையரங்கம் வாருங்கள்.. சந்தோசமாக செல்லுங்கள்.. திரும்பவும் வந்து படம் பாருங்கள்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story