காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு 15 நாட்களுக்கு பின் சுய நினைவு திரும்பியது


காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு 15 நாட்களுக்கு பின் சுய நினைவு திரும்பியது
x

இந்தி திரையுலகில் காமெடி நடிகரான ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு 15 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இன்று சுய நினைவு திரும்பியுள்ளது.



புதுடெல்லி,



இந்தி திரை துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). இவர் கடந்த 10-ந்தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்து உள்ளார்.

அப்போது, திடீர் என அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நடிகர் ராஜூவின் சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் சுய நினைவுடன் உள்ளார் என கூறினார்.

எனினும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு அடுத்த நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என கூறப்பட்டது. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என நெருங்கிய வட்டாரம் தெரிவித்து உள்ளது. அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து கவனித்து வருகிறது என்றும் மற்றொரு தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், நடிகரின் தனி செயலாளர் கார்வித் நரங் இன்று கூறும்போது, ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு 15 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இன்று சுய நினைவு திரும்பியுள்ளது. அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என கூறியுள்ளார். ராஜூவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ராஜூவின் சகோதரர் தீபு ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அவர் ஒரு போராளி. இந்த போரில் வெற்றி பெற்று விரைவில் திரும்புவார். அதன்பின் ஒவ்வொருவரையும் காமெடியால் மகிழ்விப்பார் என இதற்கு முன்பு வெளியான வீடியோ ஒன்றில் தெரிவித்து உள்ளார்.


Next Story