போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்


போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்
x

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.

இயக்குநர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் இயக்குநர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

முன்னதாக, ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story