பீஜிங் திரைப்பட விழாவில் அசத்திய 'ஜெய்பீம்' - படத்தை பார்த்து கண்ணீர் சிந்திய ரசிகர்கள்


பீஜிங் திரைப்பட விழாவில் அசத்திய ஜெய்பீம் - படத்தை பார்த்து கண்ணீர் சிந்திய ரசிகர்கள்
x

பீஜிங் திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்தவர்கள் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோரது நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

பீஜிங்,

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், 94-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம்பிடித்தது.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படம், ஒரு சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கியது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கேற்ப படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனிடையே நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் 12-வது பீஜிங் திரைப்பட விழாவில் 'ஜெய்பீம்' திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பலர் கண்ணீர் சிந்தியுள்ளனர். அதோடு சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் இது போல் பல தமிழ் திரைப்படங்களை காண வேண்டும் எனவும், தமிழ் கலாச்சாரம், நடைமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இது 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Next Story