மோசடி புகார்: பிரபல நடிகைக்கு கைது வாரண்டு...!


மோசடி புகார்: பிரபல நடிகைக்கு கைது வாரண்டு...!
x

இந்தி நடிகை ஜரீன் கான் தமிழில் ‘நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஜரீன் கான். இவர் 'வீர்', 'ரெடி', 'ஹவுஸ்புல்-2' உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார், தமிழில் 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

கொல்கொத்தாவில் கடந்த 2018-ல் நடந்த துர்கா பூஜை விழாவில் நடனமாட ஜரீன் கானை விழாக்குழுவினர் ஒப்பந்தம் செய்து பணம் கொடுத்தனர். ஆனால் சொன்னபடி விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும், பணம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தனக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், ஜரீன் கான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேல் முறையீடு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதையடுத்து ஜரீன் கானுக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது, ''என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. விழாவுக்கு முதல்-மந்திரி வருவதாக பொய் சொல்லி என்னை அழைத்தனர். அதனால் போகவில்லை. வக்கீலை சந்தித்து பேசிய பிறகு விளக்கம் அளிக்கிறேன்'' என்றார்.


Next Story