'சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது' - பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த குஷ்பூ


சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது - பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த குஷ்பூ
x

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாடகி சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சென்னை,

கேரளாவின் வானம்பாடி என அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா (வயது 60). சின்ன குயில் சித்ரா என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்.

தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை வென்றவரான பாடகி சித்ரா, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், கும்பாபிஷேக விழா நடைபெறும்போது, அன்றைய நாளின் நண்பகல் 12.20 மணியளவில், ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெயஜெயராமா என்று ஒவ்வொருவரும் மந்திரம் கூற வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலையில் மக்கள் ஏற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

அவருடைய இந்த பதிவுக்கு சமூக ஊடகத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற செய்தியை வெளியிட்டு, அரசியல் பக்கம் அவர் சார்ந்து விட்டார் என விமர்சனங்களையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பாடகி சித்ராவுக்கு நடிகை குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கதில் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். அவர் அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது. அவர்களால் ஒருவரின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது மற்றும் அதை ஏற்றுக்கொள்ளவும் தைரியம் கிடையாது. இது எனது வழி அவர்களுக்கு அனுமதி இல்லை. பாடகி சித்ரா அவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் திரிச்சூரில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த, மகளிருக்கு அதிகாரமளித்தல் என்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷோபனா பங்கேற்றார். இதற்காக குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராக தீவிர விமர்சனங்களை வெளியிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், திரையிசை பாடகி சித்ராவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு வலுத்து உள்ளது.


Next Story