'புதிய பாதை-2 விரைவில் உருவாகும்' - பார்த்திபன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு


புதிய பாதை-2 விரைவில் உருவாகும் - பார்த்திபன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு
x

‘புதிய பாதை-2’ குறித்து பார்த்திபன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

சென்னை,

இயக்குனர் பார்த்திபன் தனது ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'இரவின் நிழல்' திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், "மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப் பட்டிருந்தாலும் மகிழ்ச்சி" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் "புதிய பாதை" படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று கமெண்ட் செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், "தற்போது தயாராகிவரும் படம் முடிந்ததும் 'புதிய பாதை-2' தயாராகும்" என்று குறிப்பிட்டுள்ளார். 1989-ஆம் ஆண்டு வெளியான "புதிய பாதை" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இந்த படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story