ஷ்ரத்தா வாக்கர் வழக்கே தங்கள் காதல் முறிவுக்கு காரணம் - நடிகை துனீஷா ஷர்மாவின் காதலன் பரபரப்பு வாக்குமூலம்


ஷ்ரத்தா வாக்கர் வழக்கே தங்கள் காதல் முறிவுக்கு காரணம் - நடிகை துனீஷா ஷர்மாவின் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
x

ஷ்ரத்தா வாக்கர் வழக்கு தங்கள் காதல் முறிவுக்கு காரணம் என நடிகை துனீஷா ஷர்மாவின் காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை

இந்தி மொழி டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமாகி வந்தவர் இளம் நடிகை துனீஷா சர்மா. இவர் தற்போது 'அலிபாபா தஸ்தான் இ-காபூல்' என்ற டி.வி. தொடரில் நடித்து வந்தார்.

இதற்கான படப்பிடிப்பு மும்பையை அடுத்த வசாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. படப்பிடிப்பின் இடைவேளையின் போது, நடிகை துனீஷா அங்குள்ள மேக்அப் அறையின் குளியலறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த படக்குழுவினர், கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.

அப்போது நடிகை துனீஷா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மரௌத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்த நடிகை துனீஷா தனது 13-வது வயதில் 'பாரத் கா வீர் புத்ரா, மகாராணா பிரதாப்' என்ற தொடரில் நடித்துள்ளார். இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், பிதூர், பார் பார் தேகோ, தபாங் -3 போன்ற இந்திப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமாகி வந்த நடிகை துனீஷா திடீரென உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகை துனீஷா தற்கொலைக்கு முன்பு கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துனீஷாவும், உடன் நடித்து வந்த டி.வி. நடிகர் ஷீஷன் கான் என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.

கடந்த சில நாட்களாகவே துனிஷா படப்பிடிப்பு தளத்தில் சோகமாகவே காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே துனீஷாவின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது மகள் தற்கொலைக்கு காதலன் ஷீஷன் கான் தான் காரணம் என கூறியிருந்தார். 15 நாட்களுக்கு முன் இவர்களிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வாலிவ் போலீசார் நடிகை துனீஷாவின் காதலன் ஷீஷன் கானை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகர் ஷீஜன் கான், 'ஜோதா அக்பர்' படத்தில் இளம் வயது அக்பராக நடித்தவர். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள இவர், துனீஷாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் போது பல அதிர்ச்சியான தகவல்களை ஷீஷன் கான் வெளியிட்டுள்ளார்.ஷீஜன் கான் தனக்கும் துனீஷா சர்மாவுக்கும் இடையிலான உறவையும் முறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். வெவ்வேறு மதம் மற்றும் வயது வித்தியாசம் காரணமாக இருவரும் பிரிந்ததாக தெரிவித்தார்.தனக்கு 28 வயது என்றும், துனீஷாவுக்கு 20 வயது என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் துனீஷா ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது அவரை தடுத்து நிறுத்தியதாகவும் ஷீஜன் கூறினார்.இது தொடர்பாக நடிகையின் தாயார் வனிதா சர்மாவுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ஷ்ரத்தா மற்றும் அப்தாப் வழக்கிற்கு பிறகு அவர்கள் இந்த உறவை முடித்துக் கொண்டனர் என ஷீஜன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகை துனீஷா சர்மாவின பரிசோதனை அறிக்கையை மும்பை ஜேஜே மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Next Story