வெற்றி நிச்சயம்... வெண்ணிலா சத்தியம் - சந்திரயான்-3 குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு


வெற்றி நிச்சயம்... வெண்ணிலா சத்தியம் - சந்திரயான்-3 குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
x

கோப்புப்படம்

சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இஸ்ரோவின் கனவு திட்டமான நிலவை ஆய்வு செய்யும் பணிகளுக்காக, சந்திரயான்-1 விண்கலத்தை வடிவமைத்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. அடுத்ததாக, உலகில் எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய ரூ.978 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக லேண்டர், ரோவர் மற்றும் ஆர்பிட்டரும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறி, நிலவின் தரைப்பகுதியில் மோதி செயலிழந்தது. அதேநேரம் விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

அடுத்தகட்டமாக சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் விஞ்ஞானிகள் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து ரூ.615 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை சிறப்பாக உருவாக்கி உள்ளனர். சந்திரயான்-3 விண்கலம் 3 ஆயிரத்து 900 கிலோ எடை கொண்டது. இதில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. சந்திரயான்-3 விண்கலத்துடன் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்துடன், எல்.வி.எம்.3-எம்4 ராக்கெட் நேற்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி புறப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 15 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

சந்திரயான்-3 விண்கலம், சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம் 40 முதல் 42 நாட்கள் பயணிக்கும். இதன் லேண்டர் கருவி ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 5.45 மணிக்கு நிலவில் தரையிறங்கும். இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

"சந்திரயான் 3

விண்ணில்

நிலைநிறுத்தப்பட்டதில்

இந்திய விஞ்ஞானிகளை

அண்ணாந்து பார்க்கிறது

அகிலம்

ஆகஸ்ட் 23

அது தடுமாறாமல்

தடம் மாறாமல்

நிலாத் தரையில்

இயங்க வேண்டும்

உலகத்தின் கண்கள்

குவிய வேண்டும்

நிலாவின் மீதும்

இந்தியா மீதும்

வெற்றி நிச்சயம்

வெண்ணிலா சத்தியம்" என்று கூறியுள்ளார்.


Next Story