சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம்


சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம்
x
தினத்தந்தி 22 April 2024 11:05 AM GMT (Updated: 22 April 2024 11:35 AM GMT)

சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா - ஜோதிகா 1999-ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படதில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006-ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story