வெளியானது 'மார்க் ஆண்டனி' திரைப்படம்...! விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு...!


வெளியானது மார்க் ஆண்டனி திரைப்படம்...! விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு...!
x

விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 15 ) வெளியாகி உள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் மிரட்டி உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் டிரைலர் வெளியான போது மறைந்த கவர்ச்சி நடிகை சிலுக்கு குறித்த காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் நாயகன் விஷால் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'கடந்த ஒரு வருடத்தில் கடின உழைப்பு, ரத்தம், வியர்வை, வலி, காயங்கள் போன்ற மரண அனுபவங்களுக்குப் பிறகு, இன்று முதல் மார்க் ஆண்டனியை பெருமையுடன் வழங்குகிறோம். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story