கவுதமன் இயக்கும் 'மாவீரா' படத்தின் டைட்டில் மாற்றம்


கவுதமன் இயக்கும் மாவீரா படத்தின் டைட்டில் மாற்றம்
x

கவுதமன் இயக்கும் 'மாவீரா' படத்தின் டைட்டில் 'மாவீரா படையாண்டவன்' என்று மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' ஆகிய படங்களை இயக்கியவர் கவுதமன். 'மகிழ்ச்சி' படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் 'மாவீரா' என்ற புதிய படத்தை கவுதமன் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை வி.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'மாவீரா' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.

இந்த நிலையில், 'மாவீரா' என்ற படத்தின் டைட்டிலை 'மாவீரா படையாண்டவன்' என்று மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் வா.கவுதமன் கூறும்போது, அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்சன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் 'மாவீரா படையாண்டவன்' ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட செல்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story