போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது - ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் பதிலடி


போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது - ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் பதிலடி
x

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அறிக்கையை விமர்சித்து, நடிகர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து, நடிகர் சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்?

இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story