பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது - கவுதம் வாசுதேவ் மேனன்


பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது - கவுதம் வாசுதேவ் மேனன்
x

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் வருண் கதாநாயகனாகவும், ராஹேய் கதாநாயகியாகவும் நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஒரு பரபரப்பான ஆக்ஷன்-பேக் படமாக அமைந்துள்ளது. இப்படம் மார்ச் 1 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தை கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் எனப் பல விஷயங்கள் ஆக்ஷன் படங்களை உருவாக்குவதில் உள்ளது. இருப்பினும், வருணுடன் பணியாற்றியது ஒரு இனிமையான அனுபவம். அவர் படப்பிடிப்பைத் தொடங்க ஆர்வமாக இருந்ததோடு, கதாபாத்திரத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் உறுதியாக இருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், கதையோட்டத்தில் எமோஷன் மற்றும் காதலும் பின்னிப்பிணைந்துள்ளது. வருண் கதையில் வரும் அனைத்து ஸ்டண்ட்களையும் பாடி டபுள் இல்லாமல் செய்தார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியதாக இருந்தது. வருண் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்க, ராஹேயின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கும்.

கிருஷ்ணா வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்று ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொண்டதோடு, செட்டில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஸ்டண்ட் டீம் சிறப்பானப் பணியைச் செய்துள்ளார்கள். திரையரங்குகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.


Next Story