விஜய் தேவரகொண்டா படம் நிறுத்தம்


விஜய் தேவரகொண்டா படம் நிறுத்தம்
x

விஜய்தேவரகொண்டா அடுத்து நடிக்க இருந்த ஜனகன படத்தை கைவிட பட நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த லைகர் படம் படுதோல்வி அடைந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் சார்மியும் ஒருவர். பூரி ஜெகன்னாத் இயக்கி இருந்தார்.

இந்த படத்துக்கு விஜய் தேவரகொண்டா ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், லாபத்திலும் பங்கு வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் தோல்வி காரணமாக ரூ.6 கோடியை அவர் திருப்பி கொடுத்து, லாபத்திலும் பங்கு வேண்டாம் என்று தெரிவித்து விட்டாராம். டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் சம்பளத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

லைகர் தோல்வி காரணமாக விஜய்தேவரகொண்டா அடுத்து நடிக்க இருந்த ஜனகன படத்தை கைவிட பட நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து மொழிகளிலும் அதிக செலவில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

சம்பளம் வாங்காமல் ஜனகன படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா முன்வந்து இருப்பதாக இன்னொரு தகவலும் பரவி வருகிறது.


Next Story