‘மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடல் புகழ் பழம்பெரும் நடிகை ரத்னா மரணம்

பழம்பெரும் நடிகை ரத்னா மரணம் அடைந்தார்.
பழம்பெரும் நடிகை ரத்னா. இவர் சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு ரத்னாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்னா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. ரத்னா எம்.ஜி.ஆர் நடித்து 1964-ம் ஆண்டு வெளியான ‘தொழிலாளி’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான்...' என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. ‘நாம் மூவர்', ‘சபாஷ் தம்பி', ’இதயக்கனி’ உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மரணம் அடைந்த ரத்னாவுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரத்னா மறைவுக்கு திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story