சினிமா எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர்- டைரக்டர் பாக்யராஜ்


சினிமா எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர்- டைரக்டர் பாக்யராஜ்
x

சினிமா எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்று டைரக்டர் பாக்யராஜ் பம்பர் பட நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

வெற்றி, ஷிவானி நடித்துள்ள பம்பர் படத்தை செல்வகுமார் டைரக்டு செய்துள்ளார். எஸ்.தியாகராஜா தயாரித்துள்ளார்.

பம்பர் பட நிகழ்ச்சியில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசும்போது, "சினிமா துறையில் யோசிக்காமல் படம் எடுப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் இந்த படத்தை யோசித்து எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சினிமாவில் புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது.

நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். பாடல் பாடுபவர்களில் இருந்து படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லை. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம்.

சினிமா எழுத்தாளர்கள்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. சினிமா எழுத்தாளர்கள் தற்போது கஷ்டத்தில் உள்ளனர். இந்த நிலைமை மாற வேண்டும். தெலுங்கு மலையாள திரையுலகில் எழுத்தாளர்களுக்கு மரியாதை உள்ளது'' என்றார்.


Next Story