சத்யா


சத்யா
x
தினத்தந்தி 17 Dec 2017 7:00 PM GMT (Updated: 17 Dec 2017 7:00 PM GMT)

சத்யா 'சிபிராஜ்-ரம்யா நம்பீசன்' நடித்த சத்யா என்ற படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு: கடத்தப்பட்ட குழந்தையை தேடும் இளைஞர்.

சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் சிபிராஜும் ரம்யா நம்பீசனும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலை ரம்யா நம்பீசன் தந்தை எதிர்க்கிறார். இதனால் ரகசிய திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகின்றனர். அப்போது ரம்யா நம்பீசன் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரது நிர்ப்பந்தத்தால் ரம்யா நம்பீசனுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது.

காதல் தோல்வியில் விரக்தியாகும் சிபிராஜ் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். நான்கு வருடங்களுக்கு பிறகு ரம்யா நம்பீசனிடம் இருந்து தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு வர-சிபிராஜ் நாடு திரும்புகிறார். அவரிடம் தனது பெண் குழந்தையை யாரோ கடத்தி விட்டதாகவும் கண்டு பிடிக்க உதவும்படியும் கெஞ்சுகிறார். குழந்தையை சிபிராஜ் தேட ஆரம்பிக்கிறார்.

போலீசார் அப்படி ஒரு கடத்தலே நடக்கவில்லை என்கின்றனர். ரம்யா நம்பீசனின் கணவரோ எங்களுக்கு குழந்தையே இல்லை என்கிறார். பள்ளியிலும் ரம்யா நம்பீசன் சொல்லும் குழந்தை இங்கு படிக்கவில்லை என்கின்றனர். ரம்யா நம்பீசனுக்கு மனநிலை சரியில்லை என்கிறார்கள். இதனால் சிபிராஜ் குழம்புகிறார். ரம்யா நம்பீசன் சொல்வது உண்மையா? இல்லை கற்பனையா? அவர் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் என்ன? என்பதற்கு விடையாக மீதி கதை.

சிபிராஜுக்கு பெயர் சொல்லும் படமாக வந்துள்ளது. காதல் உணர்வுகளையும் காதலியின் பிரிவு வலிகளையும் அபாரமாக பிரதிபலித்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குழந்தையை தேடும் முயற்சிகளும் ரவுடிகளுடன் நடக்கும் மோதலும் விறுவிறுப்பானவை. கிளைமாக்சில் மர்ம முடிச்சு அவிழ்ந்து குழந்தையை பாசமாக நெருங்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

ரம்யா நம்பீசன் குழந்தையை தேடி அலையும் பரிதாபமான தாயாக வருகிறார். காதல் காட்சிகளிலும் கவர்கிறார். சிபிராஜ் தன்னை நம்ப மறுத்ததும் வேதனையில் அவர் எடுக்கும் முடிவு அதிர வைக்கிறது. கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் இன்னொரு முகம் மிரள வைக்கிறது. சதீஷ் குணசித்திர நடிப்பில் மனதில் நிற்கிறார். யோகி பாபு சிரிக்க வைக்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஆனந்தராஜ் அனுபவ நடிப்பால் கவர்கிறார். ரெட்டி என்று சக போலீசை அழைத்து குற்றவாளிகளை விசாரணையால் குடைவது சுவாரஸ்யம்.

திருமணம் முடிவான பிறகு காதலனுடன் ரம்யா நம்பீசன் படுக்கையை பகிர்வது உறுத்துகிறது. அழுத்தமான திரைக்கதையில் காட்சிகளை எதிர்பாராத திருப்பங்களுடன் தொய்வில்லால் நகர்த்துகிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அருண்மணி பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. சைமன் கே.சிங் பின்னணி இசை பலம்.

Next Story