தேவராட்டம்


தேவராட்டம்
x
தினத்தந்தி 4 May 2019 4:53 PM GMT (Updated: 4 May 2019 4:53 PM GMT)

ரவுடியின் மகனை கதாநாயகன் கொலை செய்கிறார். அவரை வில்லன் பழிவாங்குகிறார். படம் "தேவராட்டம்" கதாநாயகன் கவுதம் கார்த்திக், கதாநாயகி மஞ்சிமா மோகன், டைரக்‌ஷன் முத்தையா, படத்தின் விமர்சனம்.

கதையின் கரு: 6 அக்காக்களுக்கு அருமை தம்பியாக பிறந்தவர், கதாநாயகன் கவுதம் கார்த்திக். இவர்களின் தந்தை வேல.ராமமூர்த்தி ஊரில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ‘பஞ்சாயத்து’ செய்பவர். அவரை, நகரின் மிகப்பெரிய ரவுடி பெப்சி விஜயன் கொன்று விடுகிறார். அப்பாவைப் போல் தம்பி வந்துவிடக்கூடாது என்று அக்காக்கள் 6 பேரும் பாசத்தை ஊட்டி, பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தம்பியை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்கள்.

வக்கீலான கவுதம் கார்த்திக், அநியாயங்களை கண்டு பொங்கி எழுபவர். ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்தும் வீராதி வீரர். இந்த நிலையில், ஒரு ஏழைப்பெண்ணை பெப்சி விஜயனின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து விடுகிறான். அவனை காப்பாற்ற முயற்சிக்கிறான், இன்னொரு ரவுடி. இருவரையும் அடித்தே கொல்கிறார், கவுதம் கார்த்திக்.

மகனை இழந்த பெப்சி விஜயன் கொலை வெறியுடன், கவுதம் கார்த்திக்கிடம் பதினாறு நாட்கள் கெடு விதிக்கிறார். “பதினாறாவது நாளில் உன்னை கொலை செய்வேன்” என்று சவால் விடுகிறார். அவருடைய சவால் வென்றதா, கவுதம் கார்த்திக் என்ன ஆகிறார்? என்பதே ‘தேவராட்டம்.’

கவுதம் கார்த்திக் அதிரடி நாயகன் என்ற புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு பொருந்துகிற மாதிரி உயரமும், உடல் மொழியும் அமைந்து இருக்கிறது. ஒரே அடியில் ரவுடிகளை வீழ்த்தும் துணிச்சல் இவருக்கு புதுசு. சண்டை காட்சிகளில் நிமிர்ந்து நிற்கிறார். காதல் நடிப்புக்கு தற்காலிகமாக விடுமுறை கொடுத்து இருக்கிறார். கவுதம் கார்த்திக்குக்கு திருப்பமாக அமைந்து இருக்கிறது, ‘தேவராட்டம்.’

கதாநாயகி மஞ்சிமா மோகனுக்கு அதிக வேலையில்லை. இவருக்கு வக்கீல் வேடம். கருப்பு கோட்டை மாட்டிக் கொண்டு கோர்ட்டு சீனில் சும்மா வந்து போகிறார். இரண்டு பேருக்கும் ஒரே ஒரு டூயட் திணிக்கப்பட்டு இருக்கிறது.

நகைச்சுவை காட்சிகளில் சிரித்து ரசிக்கிற மாதிரி செய்து இருக்கிறார், சூரி. மைத்துனன் மீது பாசமுள்ள மச்சானாக போஸ் வெங்கட்டும், அக்காள் வினோதினியும் ஜீவனுள்ள கதாபாத்திரங்கள். இருவரும் கவுதம் கார்த்திக் மீது சொந்த பிள்ளையை போல் பாசமழை பொழியும் காட்சிகள், நெகிழவைக்கின்றன. குறிப்பாக, மனைவியை கொன்று விடாதே என்று கொலைகாரர் பெப்சி விஜயனிடம் கெஞ்சுகிற காட்சியில், போஸ் வெங்கட் தானும் உருகி, படம் பார்ப்பவர்களையும் உருக வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பின் வில்லன் (பெப்சி விஜயன்) மிரள வைக்கிறார். கொடும்பாவி கணேசன் வேடத்தில், படம் முழுக்க பயமுறுத்தி இருக்கிறார், விஜயன்.

காட்சிகளுக்கு பின்னணி இசை மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, “கேமரா யார்? என்று கேட்க வைக்கிறது. படத்தில் ரத்த சேதம் மிகுதியாக இருக்கிறது. சில காட்சிகள் இதற்கு முன் பார்த்த படங்களை நினைவூட்டுகின்றன. அக்காள்-தம்பி பாசப்பின்னணியில், ஒரு பழிவாங்கும் கதையை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் முத்தையா. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம்.. வேகம்..வேகம்...

Next Story