5 பேர்களை கொண்ட திருட்டு கூட்டம் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம்


5 பேர்களை கொண்ட திருட்டு கூட்டம் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:42 PM GMT (Updated: 3 Oct 2019 4:42 PM GMT)

கொள்ளை கும்பலை பற்றிய படம் என்றாலும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதை. பார்த்திபன், சந்திரமவுலி, டேனியல், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் திருட்டு கூட்டம்.

கதையின் கரு:  திருடுவதையே தொழிலாக கொண்டவர்கள். இவர்களில், பார்த்திபன்தான் தலைவர். ஐந்து பேரும் திட்டம் போட்டு ஒரு மியூசியத்தில் உள்ள பாரம்பரியமான சிலைகளையும், ஓவியங்களையும் திருடுகிறார்கள். இவர்களை பிடிக்க போலீஸ் தீவிர வேட்டையில் ஈடுபடுகிறார்கள். என்றாலும், திருட்டு கும்பலை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஒரு கோடீஸ்வரருக்கு விசித்திரமான ஆசை. “சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், பரிசாக வழங்கப்பட இருக்கும் உலக கோப்பையை திருடிக் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் தருகிறேன்” என்று பார்த்திபன் தலைமையிலான திருட்டு கும்பலுக்கு ஆசை காட்டுகிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு உலக கோப்பையை திருடிக் கொடுப்பதாக பார்த்திபன் கும்பல் சம்மதிக்கிறது.

உலக கோப்பையை எப்படி திருடுவது? என்று இவர்கள் திட்டம் போடுகிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி உலக கோப்பையை திருடினார்களா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

திட்டம் போட்டு திருடுகிற கூட்டத்தின் தலைவர், பார்த்திபன். வித்தியாசமான தோற்றத்தில், தனது ஸ்டைலில் வசன உச்சரிப்பு மூலம் ரசிக்க வைக்கிறார். ‘கயல்’ சந்திரன் தனது பெயரை ‘சந்திரமவுலி’ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார்.

கதாநாயகி சாட்னா டைட்டஸ் நடிப்பிலும், தோற்றத்திலும் மெருகு கூடியிருக்கிறது. சாம்ஸ், டேனியல் ஆகிய இருவரும் கலகலப்பூட்டுகிறார்கள். அஸ்வத் பின்னணி இசையும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் கதையுடன் ஒன்ற வைக்கின்றன. படம் முழுவதிலும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில், டைரக்டர் சுதர் வெற்றி பெற்று இருக்கிறார்.

படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இடைவேளைக்குப்பின், கதை வேகம் பிடிக்கிறது. ‘கிளைமாக்ஸ்,’ ரகளை.

Next Story