குழந்தைகள் கடத்தலும், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரியும் - வால்டர்


குழந்தைகள் கடத்தலும், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரியும் - வால்டர்
x
தினத்தந்தி 15 March 2020 6:27 AM IST (Updated: 15 March 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

சிபி சத்யராஜ், நேர்மையும் துணிச்சலும் மிகுந்த போலீஸ் உதவி கமிஷனர். அவரிடம், அரசாங்க ஆஸ்பத்திரியில் குழந்தைகள் காணாமல் போவதாக அடுத்தடுத்து 2 புகார்கள் வருகின்றன. "வால்டர்" விமர்சனம்.

கதையின் கரு:  கடத்தப்பட்ட குழந்தைகள் மறுநாளே கிடைத்து விடுகின்றன. ஆனால், அடுத்த நாள் இறந்து விடுகின்றன. கடத்தல்காரன் யார், குழந்தைகளை கடத்துவதன் பின்னணி என்ன, அந்த குழந்தைகள் மறுநாளே மரணம் அடையும் மர்மம் என்ன? என்பதை போலீஸ் உதவி கமிஷனர் சிபி சத்யராஜ் விசாரிக்கிறார்.

அவரையும், அவருடைய காதலி ஷிரின் காஞ்ச்வாலாவையும் கொல்ல முயற்சி நடக்கிறது. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார்கள். சிபி சத்யாராஜுக்கு அறிமுகமே இல்லாத நட்டி, ஒரு பிரபல அமைச்சர் ஆகிய இருவருக்கும் குழந்தைகள் கடத்தலில் பங்கு இருக்கிறது என்பதை சிபி சத்யராஜ் கண்டுபிடிக்கிறார்.

இந்தநிலையில், அமைச்சரின் பேரன் பணய கைதியாக கடத்தப்படுகிறான். அவன் மீட்கப்பட்டானா, குழந்தைகள் கடத்தப்படுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு உச்சக்கட்ட காட்சியில் பதில் இருக்கிறது. சிபி சத்யராஜ் சிகையலங்காரம், உடல் மொழி ஆகியவற்றை மாற்றி ஒரு புதிய தோற்றத்துக்கு வந்து இருக்கிறார். ‘வால்டர்’ கதாபாத்திரத்தில் காக்கி உடைக்கு கம்பீரம் சேர்க்கிறார். குழந்தைகள் கடத்தப்படும் வழக்கில் அவர், ஒவ்வொரு சங்கிலியாக பிடித்து விசாரணை மேற்கொள்ளும் விதம், படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை தூண்டுகிறது. சண்டை காட்சிகளில் அதிக வேகம் காட்டியிருக்கிறார்.

இவருடைய காதலியாக வரும் ஷிரின் காஞ்ச்வாலாவுக்கு அதிக வேலை இல்லை. நட்டி, எதிர்பாராத திருப்பம். படத்தின் இறுதி காட்சியில், மேலும் திருப்பத்தை ஏற்படுத்துகிறார். ரித்விகா, அமைச்சரின் மகளாக வருகிறார். சமுத்திரக்கனி வில்லனாக வருகிறார். கதாநாயகன் சிபி சத்யராஜின் நிழல் மாதிரி அவர் கூடவே வரும் போலீஸ் ஏட்டாக சார்லி. குணச்சித்ர வேடத்திலும் ஜெயிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்.

ராசாமதியின் ஒளிப்பதிவு, படத்துக்கு பெரிய பலம். தர்ம பிரகாசின் பின்னணி இசையில், வாத்தியங்களின் மிகையான இரைச்சல். யு.அன்பு டைரக்டு செய்து இருக்கிறார். கதையும், காட்சிகளும் வேகமாக கடந்து போய்க் கொண்டிருக்கும்போது, இடையிடையே வரும் சிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலாவின் காதல் காட்சிகள் வேகத்தடையாக உள்ளன. படத்தின் இரண்டாம் பாகம், சூப்பர் வேகம்.

குழந்தைகள் கடத்தலில் உள்ள சஸ்பென்ஸ்,’ யூகிக்க முடியாத திருப்பம்.
1 More update

Next Story