நீண்ட நாட்களுக்குப்பின், ஒரு மாறுபட்ட காதல் படம் கேர் ஆப் காதல் - விமர்சனம்


நீண்ட நாட்களுக்குப்பின், ஒரு மாறுபட்ட காதல் படம் கேர் ஆப் காதல் - விமர்சனம்
x
தினத்தந்தி 12 Feb 2021 6:06 PM GMT (Updated: 12 Feb 2021 6:06 PM GMT)

ஒரு மனிதனின் வாழ்க்கையில், 4 கட்டமாக ஏற்படும் காதல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடக்கூடிய கதை. அந்த 4 கட்ட காதலும் ஒரு புள்ளியில் இணைவது, படத்தின் சிறப்பு அம்சம்.

ஒரு பள்ளிக்கூட சிறுவனுக்குள் சக மாணவி மீது காதல் வருகிறது. இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். திடீரென்று இருவரும் பிரிய நேரிடுகிறது.

49 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருக்கும் தீபன் மீது ஒரு விதவைப் பெண்ணுக்கு காதல் வருகிறது. அதை தீபன் ஏற்றுக் கொண்டாரா? என்பது உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அழகி மீது ஒரு இளைஞர் காதல்வசப்படுகிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண் விபசார அழகி என்பது இளைஞருக்கு தெரியவருகிறது. அதன்பிறகு அவருடைய காதல் என்ன ஆகிறது? என்பது ‘சஸ்பென்ஸ்.’ பிராமண வகுப்பை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஒரு தாதாவிடம் அடியாளாக இருக்கும் வாலிபருக்கும் இடையே காதல் மலர்கிறது. இவர்களின் காதல் என்ன ஆகிறது? என்பது மற்றொரு காதல் கதை.

‘முதல் மரியாதை’ படத்தில் அறிமுகமான தீபன், ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் மீண்டும் மறுபிரவேசம் செய்து இருக்கிறார். 49 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருக்கும் கதாபாத்திரத்தில், முத்திரை பதித்து இருக்கிறார். ஒப்பனை செய்து கொள்ளாத முகம், இயல்பான நடிப்பு என பக்கத்து வீட்டில் பார்த்த ஒரு நடுத்தர வயது மனிதராக மனதில் பதிந்துவிடுகிறார், தீபன். கதைநாயகிகளில் சலீமாவாக வரும் மும்தாஜ் சர்க்கார் அழகு. சோனியா கிரி, வெற்றி, கார்த்திக் ரத்னம், ஐரா, நிசேஷ், ஸ்வேதா என நிறைய புதுமுகங்கள்.

கே.குணசேகரின் ஒளிப்பதிவும், ஸ்வீகர் அகஸ்தியின் இசையும் கைகோர்த்துக் கொண்டு காட்சிகளை கவித்துவமாக நகர்த்துகின்றன. ஹேமாம்பர் ஜஸ்டி இயக்கியிருக்கிறார். படத்தின் ஒரே பலவீனம், மெதுவான கதையோட்டம். 4 காதல் கதைகளையும், அதன் தோல்விகளையும் சொல்லி, ‘கிளைமாக்ஸ்’சில் ஒரே புள்ளியில் இணைப்பது, ஆச்சரியப்படுத்துகிறது. யூகிக்க முடியாத முடிவு.

Next Story