"அந்த சமயம்... தற்கொலைக்கு முயன்றேன்" - தீபிகா படுகோனே சொன்ன அதிர்ச்சி தகவல்!


அந்த சமயம்... தற்கொலைக்கு முயன்றேன் - தீபிகா படுகோனே சொன்ன அதிர்ச்சி தகவல்!
x
தினத்தந்தி 6 Aug 2022 6:19 AM GMT (Updated: 6 Aug 2022 7:47 AM GMT)

தன் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நடிகை தீபிகா படுகோனே மனம் திறந்து பேசினார்.

மும்பை,

மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே விளக்கியுள்ளார்.

மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே, மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன், தன் குடும்பத்தின் ஆதரவுடன், எப்படி மன அழுத்தத்தை கடந்து வந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

"பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன், தூங்கிக் கொண்டே இருப்பேன். தூங்குவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று முயற்சிப்பேன்.

என்னுடைய பெற்றோர் பெங்களூருவில் வசித்து வந்தனர். அவர்கள் ஒவ்வொரு முறை என்னை காண வரும் போதும், நான் நன்றாக இருப்பதாக அவர்களிடம் தெரிவிப்பேன். அப்படி ஒரு நாள் அவர்கள் என்னை சந்தித்து விட்டு பெங்களூர் புறப்படும் போது நான் உடைந்து போயிருந்தேன்.

அப்போது என்னுடைய அம்மா என்னிடம், உனக்கு ஆண் நண்பர்கள் மூலம் ஏதாவது பிரச்சனையா? இல்லையில் வேலை இடத்தில் பிரச்சனையா? ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல்லுமாறு கேட்டார். ஆனால் அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஏனென்றால், அப்படி எந்த ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை.

ஆனாலும், என்னைச் சுற்றி ஒன்றுமே இல்லாதது போல் இருந்தது. உடனே என்னுடைய தாய் என் பிரச்சினையை புரிந்து கொண்டார். அப்போது கடவுள் தான் எனக்கு அவர்களை என்னுடன் சேர்த்து வைத்து என் பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார்.

சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய தாய்க்கு நன்றி! என்னுடைய அம்மாவுக்கே அனைத்து நன்றிகளும் போய் சேரும். நான் சினிமா தொழிலில் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று காரணமே இல்லாமல் நான் உடைந்து விடுவேன். எனக்கு அதீத மன அழுத்தம் ஏற்பட்டது.

தினமும் காலையில் எழுந்த போது ஒன்றுமே இல்லாதது போல தோன்றும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், வெறுமனே இருக்கும். அதன் காரணமாக அழ ஆரம்பிப்பேன்.

பின், தியானம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனைகளை முறையாக பெற்று வந்தேன். பல மாதங்கள் அவ்வாறு சென்றன.

முதலில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற தயக்கமாக இருந்தது. ஆனால் நான் மனப்போராட்டங்களை கடந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தேன்" என்று கூறினார்.

2015 ஆம் ஆண்டு, இந்த மன அழுத்தத்துடன் போராடி பின் அதிலிருந்து விடுபட்டது எப்படி சாத்தியமானது என்பதை தீபிகா படுகோனே கூறினார். தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். அதன் மூலம் மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.


Next Story