விஸ்பரூபமாக மாறிய இந்தி சர்ச்சை: கன்னட நடிகர் கிச்சா சுதீப்- அஜய் தேவ்கன் காரசார விவாதம்


விஸ்பரூபமாக மாறிய இந்தி சர்ச்சை:  கன்னட நடிகர் கிச்சா சுதீப்- அஜய் தேவ்கன் காரசார விவாதம்
x
தினத்தந்தி 27 April 2022 3:26 PM GMT (Updated: 27 April 2022 3:28 PM GMT)

நாங்கள் இந்தியை மதித்து, அதை கற்றுக்கொண்டதால் உங்கள் பதிலை புரிந்து கொள்ள முடிந்தது என கிச்சா சுதீப் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கடந்த சில மாதங்களாக தென்னிந்திய மொழிகளில் தயாரான திரைப்படங்கள், இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எ.ஃப்.-2 உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. 

இந்த நிலையில் கன்னட நடிகர் கிச்சா சுதீப், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, “இந்தி என்பது தேசிய மொழி அல்ல. பாலிவுட் திரைப்படங்களை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டாலும், சமீப காலமாக அவை வெற்றி பெறுவதில்லை. தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகின்றன” என்று தெரிவித்தார்.  

ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எஃப்.-2 ஆகிய திரைப்படங்கள் வட மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது குறித்து கிச்சா சுதீப் தனது கருத்தை தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர் கூறிய கருத்துக்கு பல எதிர்ப்புகளும் கிளம்பின. அந்த வகையில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது டுவிட்டர் பதிவின் மூலம் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அந்த பதிவை முழுவதும் அவர் இந்தியிலேயே பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அஜய் தேவ்கன் கூறியிருப்பதாவது;-

“சகோதரரே, உங்கள் கருத்துப்படி இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள்?

இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் அன்றும், இன்றும், என்றும் இருக்கும். ஜன கன மன.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அஜய் தேவ்கனின் இந்த பதிவு டுவிட்டரில் வைரலானது. இதையடுத்து கிச்சா சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜய் தேவ்கனுக்கு பதிலளித்தார்.

அந்த பதிவில், “நான் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் இந்தி குறித்து பேசியது உங்களிடம் தவறாக வந்து சேர்ந்துள்ளது என நினைக்கிறேன். உங்களை நேரில் பார்க்கும் போது எனது கருத்தை தெளிவாக உங்களிடம் விளக்குகிறேன். நான் யாரையும் காயப்படுத்தவோ, விவாதம் செய்யவோ நினைக்கவில்லை. நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

நமது நாட்டின் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன், அத்தனை மொழிகளையும் நேசிக்கிறேன். இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மேலும் நீங்கள் இந்தியில் வெளியிட்ட பதிவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு காரணம் நாங்கள் இந்தியை மதித்து, நேசித்து, அந்த மொழியை கற்றுக்கொண்டோம். ஆனால் நான் உங்களுக்கு கன்னடத்தில் பதிலளித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தானே” 

இவ்வாறு கிச்சா சுதீப் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், “நீங்கள் எனது நண்பர். தவறான புரிதலை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. திரைத்துறையை எப்போதும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம். அதே சமயம் எங்கள் மொழியை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மொழிமாற்றம் செய்யும் போது சில கருத்துக்கள் விடுபட்டிருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு மீண்டும் பதில் தெரிவித்த கிச்சா சுதீப், “மொழிமாற்றம் என்பது அவரவர் புரிதலுக்கு உட்பட்டது. முழு விவரமும் தெரிவதற்கு முன்னர் எதிர்வினையாற்றாமல் இருப்பது முக்கியம் என கருதுகிறேன். உங்களை நான் குறை சொல்லவில்லை. ஏதேனும் ஒரு படைப்பு சம்பந்தமாக உங்களிடம் இருந்து ட்வீட் வந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்” என்று கூறி இருவரும் டுவிட்டர் போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story