சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய 6 நூல்கள்


சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய 6 நூல்கள்
x
தினத்தந்தி 3 Aug 2021 1:25 PM GMT (Updated: 3 Aug 2021 1:25 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய 6 நூல்கள்.

சென்னை,

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவிில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

அப்போது, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பிரபல ஆங்கில பதிப்பகங்களோடு கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள நூல்களான திருக்குறள் - பேராசிரியர் பி.எஸ்.சுந்தரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான உலகப் பொதுமுறை எனப் போற்றப்படும் திருக்குறள்,

கரிசல் கதைகள், கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்த கரிசல் நில மக்களின் (கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டங்கள்) வாழ்வியலை நுணுக்கமாக சித்தரிக்கும் கதைகள்,

வாடிவாசல் - தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் சிறப்பைச் சித்தரித்து சாகித்ய அகாடமி விருது பெற்ற சி.சு.செல்லப்பா எழுதிய படைப்பு,

செம்பருத்தி - எழுத்தாளர் கி.ஜானகிராமனின் சிறந்த படைப்புகளில் ஒன்றான குடும்ப உறவு சிக்கல்களைச் சித்தரிக்கும் நாவல்,

சுழலில் மிதக்கும் தீபங்கள் - கருணாநிதியால் நாட்டுடமையாக்கப்பட்ட, சாகித்ய அகாடமி விருதுபெற்ற முதல் பெண் நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணனின் நாவல்,

தலைமுறைகள் - நாகர்கோவில் வட்டார வழக்கும், கைம்பெண் மறுமணத்தையும் முக்கிய அம்சங்களாக கொண்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற நீல.பத்நாபன் எழுதிய நூல் ஆகிய 6 நூல்களை ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Next Story