பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நெல்லை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நெல்லை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 31 Dec 2016 7:30 PM GMT (Updated: 31 Dec 2016 12:57 PM GMT)

பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக நெல்லை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை,

பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக நெல்லை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. மாநில பொருளாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான திரிபுரசெல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை கல்வி மாவட்ட பொறுப்பாளர் அங்குராஜ்குமார், தென்காசி கல்வி மாவட்ட பொறுப்பாளர் தமிழரசி தேவி, மாவட்ட துணை செயலாளர் ரஜூலா ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பணி நிரந்தரம்


மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக அரசு நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை அவரவர் பணியாற்றும் பகுதி நேர பணியிடத்தை புதிய பணி நிரந்தர பணியிடமாக அறிவித்து, அந்த இடங்களில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் பணிக்காலத்தில் இறந்து போன பகுதி நேர சிறப்பாசிரியர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.5 லட்சம் வழங்க ரேண்டும். பணி நிறைவு பெற்ற பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

சென்னையில் போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் வருகிற 6–ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் நெல்லை மாவட்ட அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 21 ஒன்றிய பொறுப்பாளர்களும், பகுதி நேர சிறப்பாசிரியர்களும் கலந்து கொண்டார்கள். கடையம் ஒன்றிய பொறுப்பாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Next Story