செங்கம் அருகே தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவிக்கு வலைவீச்சு கள்ளக்தொடர்பை கண்டித்ததால் வெறிச்செயல்


செங்கம் அருகே தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவிக்கு வலைவீச்சு கள்ளக்தொடர்பை கண்டித்ததால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 6 Feb 2017 1:29 PM GMT)

செங்கம் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கம்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கள்ளத்தொடர்பு

செங்கத்தை அடுத்த இளங்குண்ணி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி பாரதி (40), காய்கறி, பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பாரதிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில நாட்களாக தனிமையில் சந்தித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பழனி மனைவி பாரதியை கண்டித்துள்ளார். மேலும் பழனி மது அருந்தி விட்டு கள்ளத்தொடர்பை கைவிடும்படி பாரதியிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஆனாலும் பாரதி தொடர்ந்து அந்த நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த பழனி மீண்டும் பாரதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முடிந்த சிறிது நேரத்தில் மதுபோதையில் இருந்த பழனி வீட்டில் படுத்து தூங்கினார். கணவர் அடிக்கடி தகராறு செய்வதால் ஆத்திரம் அடைந்த பாரதி வீட்டில் மோட்டார் சைக்கிளுக்கு ஊற்ற வாங்கி வைத்திருந்த பெட்ரோலை பழனி மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த பழனி அலறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் கணவன்– மனைவிக்கும் இடையே நடைபெறும் வழக்கமான குடும்ப சண்டை என அங்கு செல்லவில்லை. உடல் முழுவதும் எரிந்த நிலையில் சம்பவ இடத்தில் பழனி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பாரதி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மனைவிக்கு வலைவீச்சு

சிறிதுநேரம் கழித்து பழனி வீட்டில் இருந்து கருகிய வாடை வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பழனியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு உடல் கருகிய நிலையில் பழனி இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாரதியை தேடி வருகிறார்கள்.

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவனை பெட்ரோல் ஊற்றி மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story