தைத்தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது


தைத்தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 6 Feb 2017 8:19 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவையொட்டி தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம்,

தைத்தேர் திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் தைத்தேர் திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி இரண்டாம் நாளன்று காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலையில் ஹம்ச வாகனத்திலும், மறுநாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 3-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை தங்க கருட வாகனத்திலும், 4-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 5-ந் தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், யானை வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கண்ணாடி அறையில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு கருடமண்டபம் அருகில் உள்ள கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உத்திரை வீதிகளில் உலா வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 8.30 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று நள்ளிரவு கண்ணாடி அறையை சேர்ந்தார்.

தேரோட்டம்

விழாவின் 8-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு ரங்கவிலாஸ் மண்டபத்தை அடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சேருகிறார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 3.45 மணிக்கு வருகிறார். 4.15 மணி முதல் 5 மணி வரை ரதரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆளும்பல்லக்கு

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 9-ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 10-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.


Next Story