தட்டம்மை– விளையாட்டம்மை தடுப்பூசி குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும்


தட்டம்மை– விளையாட்டம்மை தடுப்பூசி குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும்
x
தினத்தந்தி 7 Feb 2017 9:30 PM GMT (Updated: 7 Feb 2017 8:57 PM GMT)

தட்டம்மை– விளையாட்டம்மை தடுப்பூசி குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வேண்டுகோள்

கடலூர்,

தட்டம்மை– விளையாட்டம்மை தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் வேண்டுகோள் விடுத்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

தட்டம்மை, விளையாட்டம்மை தடுப்பூசி குறித்து மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஊக்கப்படுத்த வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் தட்டம்மை– விளையாட்டம்மை தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாணவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. தொடக்க நாளில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தடுப்பூசி போடுவதால் வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல் வந்து உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். பிறவி குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது கட்டுப்படுத்தப்படும்.

ஆகவே இந்த தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். கண்டிப்பாக அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு துணை இயக்குனர் ஜவஹர்லால் கூறினார்.

கூட்டத்தில் உலக சுகாதார நிலைய கண்காணிப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சாய்ராபானு, தட்டம்மை– விளையாட்டம்மை தடுப்பூசி பணிகள் கடலூர், விழுப்புரம் மாவட்ட பார்வையாளர் புதுடெல்லியை சேர்ந்த டாக்டர் ஆஷிக் கார்க், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் பிச்சையப்பன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story