பிளஸ்–2 தேர்வு நாளை தொடக்கம்: மாவட்டத்தில் 102 மையங்களில் 38,011 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்


பிளஸ்–2 தேர்வு நாளை தொடக்கம்: மாவட்டத்தில் 102 மையங்களில் 38,011 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 28 Feb 2017 5:23 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள பிளஸ்–2 தேர்வை 102 மையங்களில் 38 ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

சேலம்,

பிளஸ்–2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 299 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 542 மாணவர்கள், 18 ஆயிரத்து 697 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 239 பேர் பிளஸ்–2 தேர்வை எழுதுகின்றனர்.

இதுதவிர தனித்தேர்வர்கள் 1,772 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். மொத்தமாக மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்–2 தேர்வுக்காக மாவட்டத்தில் 102 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வையொட்டி வினாத்தாள்கள் சேலம் மற்றும் சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 17 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை தேர்வு நாளன்று அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

தேர்வு பணியில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே தேர்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்வின் போது காப்பி அடித்தல் போன்ற முறைகேட்டை தடுக்க 65 முதுநிலை ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அன்றைய தினம் வெளி நபர்கள் நுழைவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்படும்‘ என்றார்கள்.


Next Story