மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் சட்ட மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி

மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று சட்ட மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
பெங்களூரு,
மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று சட்ட மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
அணையை கட்டியே தீருவோம்எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகளில் சிலவற்றை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கும், குறிப்பேடு விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை. எடியூரப்பாவுக்கு எதிராக அரசு புகார் செய்யவில்லை. இது தனியார் தொடுத்த வழக்குகள். கணக்கு தணிக்கை அறிக்கையில் விவரங்கள் தெளிவாக உள்ளன. அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆலோசித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை. அங்கு புதிய அணையை கட்டியே தீருவோம். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதை தவிர்த்து, காவிரி நீர் படுகையில் கர்நாடக அரசுக்கு முழு உரிமை உள்ளது. தமிழக அரசு இதை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. மேகதாதுவில் புதிய அணை கட்டுவதால் 2 மாநிலங்களுக்கும் பயன் கிடைக்கும்.
இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.
சித்தராமையா கோபம்முன்னதாக பட்ஜெட் முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சித்தராமையாவிடம் நிருபர்கள் குறிப்பேடு விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்டனர். இதற்கு கடும் கோபம் அடைந்த சித்தராமையா, “உங்களுக்கு வேறு வேலை இல்லையா? அதுபற்றியே தான் கேட்பீர்களா?“ என்று எதிர்கேள்வி கேட்டார். எடியூரப்பா தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சித்தராமையா சென்றார்.